
'ஜக்குபாய்' படம், இறுதிக்கட்டத் தொழில் நுட்ப வேலைகள் முடிவதற்கு முன்னதாகவே, இணையத்தில் வெளியாகியதும், அதன் பின் அப்படத்தின் தயாரிப்பாளரான ராதிக சரத் குமார், சரத் குமார், பத்திரிகையாளர் சந்திப்பில் இந்தப் பிரச்சனையை வெளிப்படுத்தியதும், இது குறித்த முறைப்பாட்டினை தமிழக முதல்வரின் கவனத்திற்குக் கொண்டு வந்ததும் வெளிவந்த தகவல்கள்.
முதல்வரின் உடனடி நடவடிக்கையால் தொடர்புடை சிலர் கைதானதாகவும் செய்தி. பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட சூப்பர் ஸ்டார் ரஜினி, 'படத்துக்கு நீங்க செலவு செய்யாமலே நல்ல பப்ளிசிட்டி கிடைச்சிருக்கு, கவலப்படாம படத்தை ரிலீஸ் பண்ணுங்க' என்று சொன்ன போது, சோர்ந்து போயிருந்த ராதிகாவும், சரத்குமாரும் உற்சாகமானார்கள். அதெ உற்சாகத்தோடு படத்தை முடித்து, வெளியிட முயன்றால் படத்தை வேண்டுவதற்கு யாரும் முன்வரவில்லையாம் எனத் தெரியவருகிறது.
15 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்ட்ட படத்தை வாங்க யாரும் வராவிட்டாலும், சொந்தமாக வெளியிடலாமென முடிவு பண்ணிய தயாரிப்பாளர்களுக்கு, பொருத்தமாகத் தியேட்டர்களும் கிடைக்கவில்லையாம். இந்த நிலையில் 'ஜக்குபாய்' படத்தை அடிமாட்டு விலைக்கு கலைஞர் டி.வி வாங்கியிருப்பதாகத் தகவல். இந்த வர்த்தகத்துக்குப் பின்னாலும் ஒரு அரசியல் பேரம் பேசப்பட்டிருப்பதாகத் தெரியவருகிறது. அதன்படி இந்த வருட இறுதிக்குள் சரத்குமாரின் சமத்துவக்கட்சி, திமுக ஜோதியில் சங்கமாகிவிடும் எனக் கூறப்படுகிறது.
இந்தப் பேரங்களினால் அதிக மன உளைச்சலுக்க ஆளாகியிருப்பவர் ராதிகாதான் எனத் தெரிய வருகிறது. 'ஜக்குபாய்' வெளியான விடயம் செய்தியான போதே, இதற்குப் பின்னால் அரசியல் இருக்கலாம் எனவும் தெரிவிக்கப்ட்டமை குறிப்பிடத்தக்கது. ஆக 'ஜக்குபாய்' கலைஞருக்கு, சரத்-ராதிகா திமுகவுக்கு றிடர்ன்; வியாபாரம் ஓவர் என்கிறது சென்னைத் தகவல்கள். இந்தத் தகவல்கள் ஊடகங்களுக்குக் கசியாதிருக்க வேண்டுமென சரத் விரும்பினாராம். ஆனால் கசிந்தால்தானே அரசியல்.









